நான், என் முகம் தேடும் ஒரு பயணி. என் அனுபவங்கள் என்னைத் தனிமை படுத்துமா என்று யோசித்து பார்க்கிறேன். ஆனால் நான் மட்டும் தனிமையில் இல்லை - அந்த சிந்தனையிலும்.
"நான் நான் என்றேன்
நீயா !? என்றனர் ஊர் மக்கள் "
எனக்கும் உனக்கும் உள்ள கருத்து வேறுபாட்டை போக்குகின்ற களமா இது? என்னை எனக்கே அடையாளம் காட்ட போகும் தளமா? பயணம் தொடங்கிவிட்டது. மொழி, மதம், கலாச்சாரம் ஆகிய நான் தேடாது என்னைத் தேடியடைந்த அடையாளங்கள் தவிர, நான் வேண்டும் அடையாளங்களின் தேடலின் தொடக்கம் இது. என் சிந்தனைத் தேக்கம் இது. இந்த தேடலின் பயன்பாடு எனக்கு கிடைத்தாலும் உனக்கு கிடைத்தாலும் என் பயணம் வெற்றியே. பயணிப்போம்.
என் உணர்ச்சியின் உச்ச நிலை பல சமயம் மௌனமாகவே முடியும். அந்த வெளி மௌன சமயங்களிலும் என் மனம் கொடி பிடிக்காமல் போராட்டம் செய்யும். சமாதி நிலை அல்ல சாது நிலை இந்த போராட்டத்தின் முற்று புள்ளி என்ற தெரிவு சில புத்தகங்கள் தந்தது. மற்றபடி கிடைப்பதெல்லாம் இடைக்கால வாய்தாக்களே. மௌனம் பலமான வார்த்தை பேசும் என்ற நம்பிக்கையில் என் மனதுடன் ஒரு உடன்படிகை செய்து இந்த வலை பதிவு மாலையைத் தொடங்குகிறேன்.